பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-47

இதழ் - 49                                                                                           இதழ் -

நாள் : 02-04-2023                                                                           நாள் : 0-0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” சுளிக்கச் சொல்லேல் ”
உரை
    கேட்பவர் வெறுப்பும் சினமும் கொள்ளும் வகையில் பேசாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 47
    சகுனிதுரி யோதனற்குச் சர்ப்பனையாகக் கேடு
    மிகவுரைத்துத் தன்னுயிரும் வீந்த – நகைபார்
    மனுநெறிதேர் புன்னை வனநாதா யாவ
    ரெனினுஞ் சுளிக்கச்சொல் லேல்.

உரை விளக்கம் :
     மனுநெறியாகிய நீதியிற் தேர்ந்த புன்னைவன நாதனே! சகுனி துரியோதனற்கு வஞ்சனையாக கேடுபயப்பனவற்றை மிகவும் சொல்லி வந்தமையால் பாண்டவர்களுடன் குருச்சேத்திரிப் போர்மூண்டு துரியோதனாதியர்களுடன் அவனும் இறந்தான். இது நகைப்பிற்குரியது. ஆதனால் யாராயினும் அவர்கள் சினமோ வெறுப்போ கொள்ளும் விதமாக எச்சொல்லையும் சொல்லாதே.
 
விளக்கம் : 
    சகுனி – கௌரவர் தலைவனான துரியோதனனின் மாமன், காந்தாரியின் அண்ணன். அவன் தனது தங்கை மகனாகிய துரியோதனன் உள்ளத்தில் பாண்டவர்கள் குறித்து வஞ்சனையை தன் சொல்வன்மையால் புகுத்தினான். அதனால் போர்மூண்டு அவனும் உயிர்விடுபடியாயிற்று என்பதை “தன்னுயிரும் ஈந்த” என்றார். சர்ப்பனை – வஞ்சகம்.  நகைபார் என்றது யாரும் தன்னுயிருக்குக் கேடு விளைவிக்கும் செயலில் ஈடுபட மாட்டார்கள் என்பதால். நீதிநெறி அறிந்தவர் புன்னைவன நாதன் என்பதை “மனுநெறி தேர் புன்னைவன நாதா” என்றார். சுளித்தல் – முகம் சுளித்தலோடு உள்ளம் சுளித்தலும் எனலாம்.
சகுனி கதை
 
    காந்தார நாட்டு மன்னனாகிய சகுனி என்பவன் வஞ்சகப் புத்திகளைச் சொல்லிக் கொடுத்துத் தன் மருகனாகிய துரியோதனனைக் கெடுத்தழித்ததன்றித் தானுங் கெட்டழிந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    பிறர் உள்ளம் வெறுப்பையோ சினத்தையோ கொள்ளுமாறு ஒரு சொல்லும் சொல்லுதல் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment