பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-51

இதழ் - 53                                                                                           இதழ் -
நாள் : 30-04-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” சையெனத் திரியேல் ”
 
உரை
    சான்றோர் வெறுத்து ஒதுக்கித் தள்ளுமாறு நடத்து கொள்ளாதே.
 
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –51
    தூயரகு ராமன்பாற் சோரமுன்னி மாரீசன்
    மாயமா னாய்த்திரிந்து மாய்ந்ததுபார் – ஞாயமன்றோ
    வீசுபுகழ்ப் புன்னைவன மேகமே யித்தலத்தி
    லேசை யெனத்திரி யேல்


உரை விளக்கம் :
     புகழ் நிரம்பிய புன்னைவன நாதன் என்னும் வள்ளலே! தூயரான இராமனிடத்து வஞ்சனை கொண்டு மாரீசன் என்பான் மாயமானாகத் திரிந்து இராமனின் அம்பால் மாய்ந்து போனான். அதைக் காண்பாயாக. இது நியாயம்தானே.  எனவே இவ்வுலகில் சான்றோர் வெறுத்து ஒதுக்கித் தள்ளும் செயல் செய்து திரியாதே.
 
விளக்கம்
    ரகுராமன் – ரகு வம்சத்தைச் சார்ந்த இராமபிரான். சோரம் – வஞ்சனை, களவு. மாரீசன் – தாடகையின் மகன். வீசுபுகழ் – வளரும் புகழ். மேகம் – வள்ளல் என்ற குறிப்பு.
 
மாரீசன் கதை
    தாடகை என்பவளுடைய மகனாகிய மாரீசனை சீதையைக் கவரும்படி இராவனை நினைந்து இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையைத் தனிமையாக்கும்படி அனுப்பினான். மாரீசனும் ஒருமானின் வடிவெடுத்துப் போய்ச் சீதாப்பிராட்டி காணும்படிஉலாவினான். மானின் சிறப்பைக் கண்ட சீதாப்பிராட்டி “இம்மானை எனக்குப் பிடித்துத்தரவேண்டும்” என்று இராமனை வேண்டினான். இராமனும் வெகுதூரந் தொடர்ந்துபோயும் அகப்படாமைகண்டு அம்புசெலுத்த அவ்வம்பினால் விழுந்திறந்தான். விழும்போது “சீதா லக்குமணா” என்ற சொற்கேட்டு இலக்குமணனுந் தொடர்ந்தான். சீதையும் தனிமையாயினாள். அப்போது சந்நியாசியாக இராவணன் சென்று சீதையைக் கவர்ந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

 
 
கருத்து
   சான்றோர்கள் வெறுக்கும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment