பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 19                                                                     இதழ் -  
நாள் : 04-09-2022                                                      நாள் : ௦௪-௦௯- ௨௦௨௨
 போலி
     ஒரு சொல்லில் இயல்பாய் இருக்கும் எழுத்திற்குப் பதிலாக வேறொரு எழுத்து வந்து அதே பொருள் தருவது போலி எனப்படும். போல வருவது போலி. இது தமிழ்ச்சொல்லில் மட்டும் வரும். இதனை எழுத்துப்போலி என்றும் கூறுவர். 
 
போலி மூன்று வகைப்படும். 
அவையாவன,
     1. முதற்போலி
     2. இடைப்போலி
     3. கடைப்போலி

1. முதற்போலி

     சொல்லின் முதல் எழுத்து இருக்கவேண்டிய இடத்தில் பிறிதோர் எழுத்து வந்தாலும் பொருள் மாறாமல் வருவது முதற்போலி எனப்படும்.
 
சான்று
  • மயல் - மையல்
     இவ்விரு சொற்களில் உள்ள முதல் எழுத்து (ம - மை) என மாறி           
     இருந்தாலும் பொருள் மாறவில்லை.
  • நயம்படஉரை - ஞயம்படஉரை 
     சொல்லின் முதலில் வந்துள்ள 'ந'கரத்துக்கு 'ஞ'கரம் போலியாக வரும்.
  • ஔவையார் – அவ்வையார் 
     சொல்லுக்கு முதலில் 'ஔ'க்கு 'அவ்' என்ற எழுத்துகள் போலியாக வரும்.
 
    இவ்வாறு சொல்லின் முதலெழுத்து இருக்கவேண்டிய இடத்தில் பிறிதொரு எழுத்து வந்தாலும் பொருள்மாறாமல் வருவது முதற்போலி எனப்படும்.
 
2. இடைப்போலி
     சொல்லின் இடையில் இருக்கவேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதேபொருள் தருவது இடைப்போலி ஆகும்.
 
சான்று
  • அரயன் (அரசன்) -  அரையன்
  • இலஞ்சி - இலைஞ்சி
  • அமச்சு  -  அமைச்சு
     சொல்லுக்கு இடையில் 'அ 'காரத்திற்கு ஐகாரம் போலியாக வரும்.
 
3. கடைப்போலி ( ஈற்றுப்போலி )
     சொல்லின் இறுதியில் இருக்கவேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதேபொருள் தருவது கடைப்போலி ஆகும்.
 
சான்று
  • நலம் - நலன்
  • அகம் - அகன்
    சில சொற்களின் இறுதியில் 'ம் ' என்னும் எழுத்திற்கு 'ன்' போலியாக வரும். 
  • குடல் - குடர்
  • பந்தல் - பந்தர்
     சில சொற்களில் இறுதியில் உள்ள 'ல்' என்னும் மெய்யெழுத்திற்கு 'ர்' என்னும் 
     எழுத்து போலியாக வரும்.
 
 
( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020

 

No comments:

Post a Comment