இதழ் – 9 இதழ் – ௯
நாள் – 26-06-2022 நாள் – உ௬.௬.௨௰உஉ
ஒற்றளபெடை
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரைமாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது ஆகும்.
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும் ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
ங, ஞ, ண, ந, ம, ன, வ, ய, ல, ள, ஆய்தம்
அளபுஆம் குறில் இணை, குறில் கீழ், இடை, கடை
மிகவே அவற்றின் குறிஆம் வேறே - நன்னூல் நூற்பா. 92
குறில் எழுத்தை அடுத்தும், தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளை அடுத்தும் சொல்லின் இடையிலும், இறுதியிலும் அளபெடுக்கும். இவ்வெழுத்து அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே மெய்யெழுத்து வரும்.
குறில் எழுத்தை அடுத்து வருவதைக் குறில்கீழ் என்றும், தொடர்ந்து வரும் இரண்டு குறில் எழுத்துகளுக்கு அடுத்து வருவதைக் குறிலிணைக்கீழ் என்றும் கூறுவர்.
சான்று
எங்ங்கிறைவனுள - குறில்கீழ் இடையில் அளபெடுத்தல்
கண்ண் கருவிளை - குறில்கீழ் கடையில் அளபெடுத்தல்
கலங்ங்கு நெஞ்சமிலை - குறிலிணைகீழ் இடை
விடங்ங்கலந்தானை - குறிலிணைக்கீழ் கடையில் அளபெடுத்தல்
வெஃஃகுவார்க்கில்லை - குறிலை அடுத்து ஆய்தம் அளபெடுத்தல்
இலஃஃகு - குறிலிணையை அடுத்து ஆய்தம் அளபெடுத்தல்
( தொடர்ந்து கற்போம் . . . )
தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment