பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 53                                                                                           இதழ் -
நாள் : 30-04-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
 
சேரி
 
    பல குடிகள் சேர்ந்து வாழ்ந்த இடம் சேரி என்று பெயர் பெற்றது. பள்ளர் வாழுமிடம் பட்சேரி எனப்படும். பறையர் வாழும் சேரி பறைச்சேரி; ஆயர் வாழுமிடம் ஆயர் சேரி; பிராமணர் வாழுமிடம் பார்ப்பனச் சேரி. எனவே, சேரி என்னும் சொல் ஒரு குலத்தார் சேர்ந்திருந்து வாழும் இடத்தினை முற்காலத்தில் குறிப்பதாயிற்று.
 
    சேரி என்றாலே அது ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒதுக்கப்பட்ட பகுதியும் அல்ல. ‘தஞ்சை பெருவுடையார் கோயிலின் வடமேற்கு வெளிச்சுவரை அடுத்த பகுதிதான் தளிச்சேரி அமைந்த இடம்.’ இது நகரின் நடுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சேரி எனும் சொல், ’புறத்தே’ உள்ள குடியிருப்பு அல்லது ஊர் எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள் ஒன்றாக சேர்ந்து வாழும் பகுதியின் பெயர் சேரி அவ்வளவே. – பெருவுடையார் கோயிலின் புறத்தே இருந்ததால் தளிச்சேரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரம் குறிப்பிடும் புறஞ்சேரி எனும் ஊரில், பார்ப்பனரும், பாணரும் பண்டாரங்கள் உள்ளனர். இவ்வூரைச் சிலப்பதிகாரம், ’புரிநூல் மார்பர் உறைபதி’ - அதாவது மார்பில் நூல் அணிந்தவர் வாழும் ஊர் என்று குறிக்கிறது. பறைச்சேரி, என்றால் வள்ளுவ பறையர் வாழும் ஊர் என்பதுதான் பொருள். இதேபோல், பார்ப்பனச் சேரிகளும் தமிழர் வரலாற்று ஆவணங்களில் ஏராளமாக உண்டு. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
    சோழ மண்டலக் கரையில் புதிதாகத் தோன்றிய ஒரு சேரி புதுச்சேரி என்று பெயர் பெற்றது. அவ்வூர்ப் பெயரை ஐரோப்பியர் பாண்டிச்சேரியாகத் திரித்துவிட்டனர். இக்காலத்தில் சேரி என்னும் சொல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வாழும் ஊர் அல்லது ஊரின் பகுதியாக காட்டப்படுகிறது. இழிந்த வகுப்பினராக எண்ணப்படுகின்ற பள்ளர், பறையர் முதலியோர் வசிக்கும் இடங்களைக் குறிக்கின்றது. ஒவ்வோர் ஊரிலும் சேரி உண்டு. அஃது ஊரின் புறத்தே தாழ்ந்த வகுப்பார்க்கு உரியதாக அமைந்திருக்கின்றது.

 
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment