பக்கங்கள்

தமிழக ஊர்களின் இன்றைய பெயரும் அன்றைய பெயரும்

இதழ் - 30                                                                 இதழ் -
நாள் : 20-11-2022                                                     நாள் : ௨௦ - ௧௧ - ௨௦௨௨
 
   
 
மருதம் நிலம் சார்ந்த ஊர்ப்பெயர்கள்
 
பறவையும் ஊரும்
     மருதநில ஊர்ப்பெயர்களுள் அன்னம், மயில் முதலிய சில பறவைகளின் பெயர்களைக் கொண்ட ஊர்ப்பெயர்கள் அமைந்திருக்கின்றன. வைணவ ஆழ்வார்களுள் நம்மாழ்வார் பிறந்த ஊர் திருகுருகூர் ஆகும். குருகு என்பது அன்னத்தின் பெயர். 
     அதேபோல சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற ஊரும் மயிலோடு தொடர்புடையதாகும். நாரைப்பறவையால் பெயர் பெற்ற ஊர் திருநாரையூர். கோழியின் பெயர் பெற்ற ஊர் கோழியூர். மேலும் கொக்கைக் குறிக்கும் வண்டானம் என்பது ஓர் ஊரின் பெயர். இவ்வாறு பறவை பெயர்களால் மருதநில ஊர்கள் வழங்கி வந்திருப்பதைக் காணமுடிகிறது.

பற்று
     பற்று என்பது மருதநிலத்திலுள்ள நன்செய் நிலமாகும். அஃது தென்னாட்டில் பத்து எனவும், வடநாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக்கோவிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட நிலங்களையுடைய ஊர், கோவில் பற்று என்று பெயர் பெறும். 
     இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓர் ஊர் பெருங்கருணைப் பற்று என்று அழைக்கப்படுகின்றது. அதேபோல செங்கல்பட்டு என்பது, செங்கழுநீர்ப் பற்று என்னும் அழகிய சொல்லின் சிதைவேயாகும்.
      சித்தூர் நாட்டில் பூத்தலைப் பற்று என்று ஆதியில் பெயர் பெற்றிருந்த ஊர் இப்பொழுது பூதலப்பட்டு என்று பற்று வழங்குகின்றது. வடஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்திலுள்ள ஓர் ஊர் தெள்ளாற்றுப்பற்று என்று பெயர் பெற்றது. இப்பொழுது அப்பெயர் மருவி தெள்ளாரப்பட்டு என வழங்கப்பட்டுகிறது.

புலம்
     புலம் என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். நிலம் என்பது பெரும்பாலும் மருதநிலத்தைக் குறிக்கும். தஞ்சை நாட்டில் தாமரைப்புலம், கருவப்புலம், செட்டிப்புலம் முதலிய ஊர்கள் இவ்வாறு பெயர்க்காரணங்களாக அமைவதைக் காணமுடிகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
 
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment