பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா

இதழ் - 23                                                                  இதழ் -
நாள் : 02-10-2022                                                     நாள் : --௨௦௨௨
 
 
 ஆத்திசூடி (ஔவை)
 
நன்றிமறவேல்

உரை
     ஒருவர் செய்த நன்மையை மறவாமல் என்றும் நினைக்க..

ஆத்திசூடி வெண்பா - 21  (இராமபாரதி)

பாடல்–21

     உன்னாட்டார் எல்லாம் உயிர்காத்துக் கோத்திரத்தில்
     எந்நாளும் வாழ்ந்தே இருத்தலாற் – பன்னாளும்
     பூதலத்தின் மேன்மைபெறும் புன்னைவன நாதனே
     ஏதிகழ்ந்து நன்றிமற வேல்.


உரை
     உலகத்தில் பன்னாளும் மேன்மைபெற்று வாழும் புன்னைவன நாதனே! உன்னுடைய நாட்டு மக்கள் யாவரும் உனது உயிர்காத்து உன் ஆணைப்படி எப்பொழுதும் வாழ்ந்து வருகின்றனர். ஆதலால் எதையும் இகழ்ந்துரைக்காமல் உன் மக்கள் செய்த நன்மைக்கு நன்றி மறவாமல் இருப்பாயாக.

விளக்கம்
     உன்நாட்டார் – புன்னைவனநாதன் ஆண்டுவரும் பாகை என்னும் ஊர். கோத்திரத்தில் – அரசனின் ஆளுகைப்ப்படி. ‘செய்நன்றி கொன்றார்க்கு உய்தியில்லை’ என்ற வள்ளுவரின் நன்றியறிதல் கோட்பாடு இவ்வெண்பாவில் வலியுறுத்தப்படுகிறது. ஒருவர் பல நன்மைகள் செய்திருப்பார். அதை நினையாமல் அவர் செய்த சிறுபிழையைப் பெரிதுபடுத்தி இகழ்தல் கூடாது என்பதை ‘ஏதிகழ்ந்து’ என்ற சொல்லால் குறித்தார். 
 
     “கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த 
     ஒன்றுநன்று உள்ளக்கெடும்” என்ற குறட்பா ஈண்டு நினையத்தக்கது.

(இதில் எடுத்துக்காட்டு கதை இல்லை.)

கருத்து
     ஒருவர் செய்த நன்மையை மறவாமல் நினைத்தல் வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020  
 

No comments:

Post a Comment