இதழ் - 198 இதழ் - ௧௯௮
நாள் : 19 / 04 / 2026 நாள் : ௧௯ / 0௪ / ௨௦௨௬
தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு அருகேயுள்ளது திருவண்டுதுறை. தேவாரப் பாடல் பெற்ற அத்தலம் இப்பொழுது திருவெண்துறையாகி, பிருங்கி முனிவர் வண்டு வடிவத்தில் ஈசனை வழிபட்ட இடமாகக் கருதப்படுகின்றது. இன்னும்,
"குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறை யினோடு
மயில் ஆடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றும் துறையனைத்தும் வணங்குவோமே"
என்று பாடினார் நாவரசர்.
குயில் ஆலந்துறை
குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ்சோலையினிடையே ஆலந்துறையைக் "குயிலாலந்துறை” என்று நாவுக்கரசர் குறித்தார். மாயூரம் என்னும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட நாதன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், நாயகியின் பெயர் குயிலாண்ட நாயகி என்றும் வழங்குதலால், திருநாவுக்கரசர் குறித்த குயிலாலந்துறை அதுவே எனக் கொள்ளப்படுகின்றது. இந்நல்லக்குடி ஈசனருள் விளங்கும் இடங்களுள் ஒன்றென்பது, "நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி" என்னும் நாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment