இதழ் - 192 இதழ் - ௧௯௨
நாள் : 22/ 02 / 2026 நாள் : ௨௨ / 0௨ / ௨௦௨௬
ஆறும் குளமும் - பெயரால் எழுந்த ஊர்கள்
இறைவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.
" நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு
நலந்திகழும் நாலாறும் திருவையாறும் தெள்ளாறும்"
என்று அப்பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறுகளின் ஊர்கள் குறிக்கப்படுகின்றன. அவற்றின் பெயர்க்காரணத்தை இனி காண்போம்.
திருநள்ளாறு
காரைக்காலுக்கு அருகில் உள்ளது திருநள்ளாறு. நளன் என்னும் மன்னவன் ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்.
" வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே "
என்பது தேவாரம். அதனால் சனி பகவான் வழிபாடு அங்கு சிறப்புற நடைபெறுகின்றது.
பழையாறு
முன்னாளில் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்று பழையாறாகும். சோழநாட்டு அரசுரிமையேற்கும் மன்னர். மகுடாபிஷேகம் செய்து கொள்ளுதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சிறப்பு விளங்கும். பிற்காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. முடிகொண்டான் என்ற ஆற்றின் கரையில் கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது அப்பதி.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:
Post a Comment