இதழ் - 153 இதழ் - ௧௫௩
நாள் : 13 - 04 - 2025 நாள் : ௧௩ - ௦௪ - ௨௦௨௫
நிரல்நிறைப் பொருள்கோளின் வகைகள்
எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
விளக்கம்
- செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
உதாரணம்
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்“
இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, பயனிலைகளாக கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளனர். இங்கு சுற்றார் மக்கள் என்றும் கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகச் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
முறை நிரல்நிறைப் பொருள்கோள்
விளக்கம்
- செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல்நிறைப் பொருள்கோள் ஆகும்.
உதாரணம்
“கொடி குவளை கொட்டை நுசுப்பு உண் கண்மேனி,”
இவ்வடியில் கொடி, குவளை, கொட்டை என்ற எழுவாய்ப் பெயர்ச் சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய பயனிலைகளாக நுகப்பு, கண், மேனி என்று வரிசைப்படுத்தி கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.
இவ்வாறு இச்செய்யுளில் முறை பிறழாமல் வரிசை முறையில் சொற்கள் அமைந்து வருவது ‘முறை நிரல்நிறைப் பொருள்கோள்’ ஆகும்.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020.
No comments:
Post a Comment