காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே தலைச்செங்கானம் என்னும் பெயருடைய ஊர் உண்டு. இந்த ஊர் சங்க இலக்கியத்திலும் தேவாரத்திலும் குறிக்கப்படுகின்றது. செந்நிறத்தால் பெயர் பெற்ற குன்றுகளில் ஒன்று சேலம் நாட்டிலுள்ள செங்குன்று. அச்சிகரத்தின் பெயராகிய திருச்செங்கோடு என்பது இன்று ஊர்ப்பெயராக வழங்குகின்றது. சேர நாட்டில் செங்குன்று என்னும் வைணவத் திருப்பதி நம்மாழ்வாரால் பாடப்பட்டத் தலமாகும். இந்நாளில் அது செங்கன்னூர் என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றது. அருணாசலம் என்ற வடசொல்லின் பொருள் செங்குன்றம் என்பதாகும். அருணாசலம் திருவண்ணாமலையின் மறுபெயர். இன்னும், செங்குளம், செங்களக்குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்கள் செம்மையின் அடியாகப் பிறந்தவை. அவ்வாறே கருங்குளம், கருங்குழி, கார்குறிச்சி முதலிய ஊர்ப் பெயர்களில் கருமை அமைந்திருக்கக் காணலாம்.
கருநிறம் வாய்ந்த நிலப்பரப்பு கரிசல் நிலம் எனப்படும். பாண்டி நாட்டில் சின்னக் கரிசல், குலையன் கரிசல் முதலிய ஊர்கள் உள்ளன. செந்நிறம் வாய்ந்த நிலம் செவ்வல் என்று பெயர் பெறும். தென்னாட்டில் மேலச் செவல், கீழச் செவல், முள்ளிச் செவல் முதலிய ஊர்கள் அவ்வாறு பெயர்பெற்றவையே. வெண்மை நிறத்தின் அடியாகப் பிறந்த ஊர்களான திருவெண்காடு, திருவெண்பாக்கம், திருவெள்ளறை முதலியன இங்கு நினைக்கத்தக்கன.
No comments:
Post a Comment