இதழ் - 144 இதழ் - ௧௪௪
நாள் : 09 - 02 - 2025 நாள் : ௦௯ - ௦௨ - ௨௦௨௫
சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர் வெள்ளிவீதியார் ஆவார். சங்க இலக்கியங்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றில் இவரது 13 பாடல்கள் காணப்படுகின்றன. வெள்ளிவீதியாரின் பாடல்கள் அனைத்தும் அகத்திணைப் பாடல்கள் ஆகும்.
வெள்ளிவீதியார், தம் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவற்றையே பாடல்களாக வடித்துள்ளதாக நச்சினார்க்கினியர் தனது உரையில் குறிப்பிடுகிறார்.
இவரது பாடல்களில் இருந்து,
- வாகை மரத்தின் காய்ந்த நெற்றுகள் காற்றில் கலகலக்கும்போது கயிற்றில் ஏறி ஆடுவோர் முழக்கும் பறையைப் போல ஒலியெழுப்பும்
- குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் திதியன் என்ற அரசன் அன்னியின் புன்னையை வெட்டி வீழ்த்தினான். அதைக் கொண்டாட வயிரியர் யாழிசைத்துப் பாடினர்.
- மக்கள் தாமும் தம் சுற்றமும் மகிழ்ந்து வாழத் தெய்வத்திடம் வேண்டி நின்றனர்.
- கரும்பு வயல்களில் மணலால் உயர்ந்த பாத்திகள் போடப்பட்டிருந்தன.
- பொன்மாலை அணிந்த வானவரம்பன் ஒரு சேர மன்னன், கடலிலிருந்து புயல்காற்று வீசுவது போல வேல் வீசி கோட்டைகளைத் தாக்குபவன்.
. . . போன்ற பல செய்திகள் காணப்படுகின்றன.
இவரது பாடல்கள் பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக் காட்டியுள்ளார். சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியார் காணப்படுகிறார்.
தமிழுக்குப் பெருமை சேர்த்த வெள்ளிவீதியார் பாடல்களை படித்து இன்புறுவோம்.
வரும் கிழமை ஆதிமந்தியார் என்ற தமிழ்ப் புலவர் பற்றிப் பார்க்கலாம்.
சாந்தி மகாலிங்கசிவம்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641020
No comments:
Post a Comment