இதழ் - 190 இதழ் - ௧௯0
நாள் : 08 / 02 / 2026 நாள் : 0௮ / 0௨ / ௨௦௨௬பழமொழி அறிவோம்
பழமொழி – 190
' ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு '
விளக்கம்
தமக்கு வேண்டியவர்கள் குற்றம் செய்தாலும், அவரை வேண்டியவர் எனக் கருதி விட்டுவிடாமல், முறையாகத் தண்டிப்பதே ஒரு சிறந்த அரசியல் தலைவனுக்கு அழகாகும் என்பது இப்பழமொழியின் பொருளாகும்.
உண்மை விளக்கம்
எங்கண் இணையர் எனக்கருதின் ஏதமால்;
தங்கண்ணார் ஆயினும் தகவில கண்டக்கால்;
வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.
"எங்கள் கண் போன்றவர்" என்று கருதி, உறவினரோ அல்லது நண்பர்களோ தகுதியற்ற தீய செயல்களைச் செய்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். வன்கண் (மன உறுதியுடன்) கொண்டு தண்டிப்பவனே நிலைபெற்ற ஆட்சியை ஆள்வான்.
மென்மையான உள்ளம் கொண்ட அரசன், நீண்ட காலம் ஆட்சியை நிலைநிறுத்த முடியாது. குற்றவாளியைத் தண்டிக்கும்போது வன்கண்ணனாகி தண்டிப்பதே சிறந்த ஆட்சி என்பதைக் குறிக்கவே 'ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு’ என்று இப்பழமொழி பொருள் உணர்த்துகிறது.
இத்தகைய பழமொழிகளின் பொருள்திறத்தினைத் தொடர்ந்து அறிவோம்…
முனைவர் தே. ராஜகுமார்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020

No comments:
Post a Comment