
மொழி முதல் எழுத்துகள் - 22
பன்னீர்உயிரும் கசதந பமவய
ஞங ஈரைந்து உயிர்மெய்யு மொழிமுதல்
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் (12) சொல்லின் முதலில் வரும்.
- மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து (10) மெய் எழுத்துகளின் வரிசைகள் உயிர் மெய்வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.
மொழி முதலில் உயிர் எழுத்துகள்
- அம்மா, ஆடு, இலை, ஈகை, உலகு, ஊசி, எருது, ஏர், ஐயம், ஒன்று, ஓடம், ஔவை.
மொழி முதலில் மெய் எழுத்துகள்
க – கல் கால் கிளி கீரி குகன் கூற்று கெடுதல் கேடு கை கொக்கு கோன் கௌவை
ங - ங் என்னும் மெல்லினமெய் 'விதம்' எனப் பொருள் தரும். 'ஙனம்' என்னும் சொல்லில் மட்டுமே முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது. அ, இ, உ என்ற சுட்டெழுத்துகளுடனும் எ, யா என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙகனம், இங்ஙகனம், உங்ஙனம், யாங்ஙகனம், எங்ஙகனம் என்று வரும். தற்காலத் தமிழில் இவ்வெழுதின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.
ச - சடை, சாலை, சிரிப்பு, சீர், சுடுதல், சூடு, செலவு, சேர், சைகை, சொல், சோர்வு, சௌக்கியம்.
ஞ - ஞமலி, ஞாலம், ஞெகிழி (கொள்ளிக்கட்டை)
த - தந்தை, தாய், திணை, தீமை, துணை, தூண், தென்னை, தேன், தையல், தொன்மை, தோல், தௌவல் ( கெடுதல்).
ந - நன்றி, நாடு, நிலம், நீர், நுனி, நூல், நெல், நேர்மை, நைந்து, நொச்சி, நோக்கம், நௌவி.
ப - பல், பாடு, பிஞ்சு, பீடு, புவி, பூ, பெண், பேதை, பையன், பொன், போதல், பௌர்ணமி.
ம - மண், மான், மின்னல், மீன், முளை, மூளை, மெய், மேன்மை, மையம், மொட்டு, மோனை, மௌனம்
ய - யமன், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம் .
வ - வருகை, வாடல், விளைவு, வீணை, வெல், வேலை, வையகம்
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
- ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு (8) மெய்யெழுத்துகளின் வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.
- அதேபோல ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
இவ்விலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்துமொழிக்கானவையே அன்றி, பேச்சுமொழிக்கானவை அல்ல. மேற்காட்டிய 22 எழுத்துகள் நீங்கலாக உள்ள பிற மெய் எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச்சொற்களாக இருக்கமாட்டா; பிறமொழிச் சொற்களாகவோ, ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கும்.
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment