இதழ் - 73 இதழ் - ௭௩
நாள் : 17-09-2023 நாள் : ௧௭-0௯-௨௦௨௩
கிடங்கில்
அரசனுக்குரிய படைகள் அமைந்த இடம் படைவீடு எனப்படும். தமிழ் நாட்டார் வீரத்தெய்வமாக வழிபடும் முருகன் ஆறு சிறந்த படைவீடுகளில் அமர்ந்து அருள் புரிகின்றான் என்றுரைக்கின்றனர். நெல்லை நாட்டில் பாண்டியனுக்குரிய படைவீடு ஒன்று பொருநையாற்றின் கரையில் இருந்தது. அது மணப்படை வீடு என்றழைக்கப்பட்டது. இப்பொழுது மணப்படை என்று வழங்கும் அவ்வூரின் அருகேயுள்ள கொட்டாரம், செப்பறை என்னும் சிற்றூர்கள் அதன் பழம்பெருமைக்குச் சான்று பகர்கின்றன. பாண்டிய நாட்டின் பண்டைத் துறைமுக நகரமாகிய கொற்கைக்கு மணப்படைவீடு ஒரு சிறந்த பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தது எனலாம்.
வட ஆர்க்காட்டில் ஆரணி என்னும் ஊருக்கு மேற்கே ஆறு மைல் தூரத்தில் படைவீடு என்ற பெயருடைய சிறந்த நகரம் ஒன்று இருந்தது. குறும்பர் குலத்தைச் சேர்ந்த அரசர்கள் அதனைத் தலைநகராகக் கொண்டு நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர்; அந்நாளில் அப்படைவீடு பதினாறு மைல் சுற்றளவுடையதாய், கோட்டை கொத்தளங்களோடு விளங்கிற்று. சோழ மன்னர் குறும்பரை வென்று அவர் படைவீட்டை அழித்தனர் என்று சரித்திரம் கூறும். இடிந்து விழுந்த மதில்களும், எருக்கும் குருக்கும் அடர்ந்த காடுகளும் பழைய படைவீட்டின் எல்லையைக் காட்டி நிற்கின்றன. மண் மாரியால் அவ்வூர் அழிந்து விட்டதென்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment