இதழ் - 99 இதழ் - ௯௯
நாள் : 17-03-2024 நாள் : ௧௭-0௩-௨௦௨௪
மூன்று பாண்டியர்
பாண்டிய நாட்டைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவிப்பதற்குப் பன்முறை முயன்றனர் பாண்டியர்கள். இராஜாதிராஜ சோழன் காலத்தில் மூன்று பாண்டியர் ஒன்று சேர்ந்து உள்நாட்டுக் கலகம் விளைத்தார்கள். சோழன் படையெடுத்தான். பாண்டியர் மூவரும் எதிர்த்தனர். அவர்களில் மானாபரணனும், வீர கேரளனும் போர்க்களத்தில் இறந்தார்கள். அன்னார் பெயர் கொண்டு நிலவும் ஊர்கள் நெல்லை நாட்டிற் சில உண்டு. அம்பா சமுத்திர வட்டத்திலுள்ள மானாபரண நல்லூரும், தென்காசி வட்டத்திலுள்ள வீர கேரளன் புத்தூரும் அவரது பெயருக்குச் சான்றாக நிற்கின்றன.
சுந்தர பாண்டியன்
பாண்டிய நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி. முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கியது என்பதை சாசனத்தால் அறியலாம். அவ்வூர் சுந்தர பாண்டிய நல்லூர் என்ற மறு பெயர் பெற்றிருந்தது என்பதும், சுந்தர பாண்டீச்சரம் என்னும் சிவாலயம் அங்கு அமைந்திருந்தது என்பதும் கல்வெட்டால் அறியப்படுகின்றது. இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி என்று வழங்கப் பெறுகின்றது.
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த இதழில் . . .
முனைவர் இரா. ஆனந்த்
உதவிப் பேராசிரியர்
துறைத்தலைவர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment