இதழ் - 192 இதழ் - ௧௯௨
நாள் : 22/ 02 / 2026 நாள் : ௨௨ / 0௨ / ௨௦௨௬
பகையரசர் இருவர் ஓரிடத்தைப் போர்களமாகக் கொண்டு வெற்றியைக் குறிக்கோளாக வைத்துக் கடும்போர் செய்வர். இப்போர் தத்தம் ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமையும். இப்போரிடத்து தும்பைப் பூவினைச் சூடி போரிடுவது தும்பைத்திணை எனப்படும்.
தும்பைத்திணை துறைகள் மொத்தம் – 23
1. தும்பை அரவம்
அரசனிடமிருந்து பொருள் பெற்ற படை மறவர் மகிழ்ந்து ஆரவாரம் செய்வது ஆகும்.
2. தானை மறம்
இரு திறத்துப் படைகளும் போர் செய்து அழியாமல் காத்தது. போரினை
விரைந்து மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவது. வேற்படை மறவரின்
சிறப்பினை எடுத்துக் கூறுவது.
3. யானை மறம்
தும்பை அரசனுடைய யானையின் வெற்றியைக் கண்டவர்கள் வியந்து
போற்றியது ஆகும்.
4. குதிரை மறம்
தும்பை அரசனுடைய குதிரையின் திறத்தை மிகுத்துச் சொல்லியது.
5. தார் நிலை
பகைவரின் தார்படையை (தரைப்படை) தான் ஒருவனாக நின்று தகர்ப்பேன்
என ஒரு வீரன் கூறுவது மற்றும் தன் அரசனை சூழ்ந்து கொண்ட
பகையரசர்களை தான் ஒருவனாக நின்று போர் செய்து காத்தல்.
6. தேர் மறம்
தும்பை அரசனுடைய தேர் வலிமையைக் கூறுவது.
7. பாண் பாட்டு
போர்களத்தில் இறந்துப்பட்ட மறவர்களுக்குரிய இறுதிக் கடன்களை பாணர்கள்
செய்வது ஆகும்.
8. இருவரும் தபுநிலை
போர்களத்தில் இருதிறப் படைகளோடு அரசரும் இறந்துபடுவது ஆகும்.
( தபுதல் – சாதல் )
9. எருமை மறம்
புறமுதுகிட்டு ஓடும் தன்படையைச் சினந்து, தான் மட்டும் பகைவரை எதிர்த்து
நின்று தடுக்கும் மறவனின் ஆண்மையைப் போற்றியது.
10. ஏம எருமை
தன்னிடமிருந்த ஒரே வேலினை யானை மீது எறிந்த பின்பும் கருவி தேடி
அலையாமல் தன் தோள் வலிமையால் பகைவரை வெற்றிக் கொண்டது ஆகும்.
இலக்கணம் தொடரும் . . .
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020

No comments:
Post a Comment