பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் – 10                                                                      இதழ் –  
நாள் : 03-07-2022                                                         நாள் : ௦௩-௦௭-௨௦௨௨
 
குற்றியலுகரம்
     குற்றியலுகரம் என்பதற்கு குறுகிய ஓசை உடைய உகரம் என்று பொருள். (குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ என்ற எழுத்துச் சாரியைப் பயன்படுத்துகிறோம்)

குற்றியலுகரம் என்றால் என்ன?

குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். 
     ‘உ’ என்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலித்தால் அது குற்றியலுகரம் எனப்படும்.
 
     குமரி, பகுப்பு, தேக்கு  ஆகிய சொற்களை உச்சரிக்கும் பொழுது மூன்று சொற்களிலும் 'கு' என்னும் எழுத்தை உச்சரிப்பதில் உள்ள  வேறுபாட்டினை உணரமுடிகிறது. ‘கு’ என்னும் எழுத்து சொல்லின் முதலிலும், இடையிலும் வரும்போது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்கு பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. இவ்வாறு தனக்குறிய ஓசையிலிருந்து குறைந்து ஒலிக்கும் உகரத்தைக் குற்றியலுகரம் என்கிறோம்.

    “நெடிலோடு ஆய்தம் உயிர்வலிமெலி இடை
    தொடர்மொழி இறுதி வன்மை யூர்உகரம்
    அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே.” (நன்னூல் நுற்பா. எண். 94)

     
வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வரும். 
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.
சான்று :  பாக்கு,  பேச்சு,  நண்டு,  எய்து,  சால்பு,  காற்று.

குற்றியலுகரத்தின் வகைகள்

சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் (ஈற்றுக்கு அயலெழுத்து) பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
  1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்
  2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
  3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  4. வன்தொடர்க் குற்றியலுகரம்
  5. மென்தொடர்க் குற்றியலுகரம்
  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

     தனிநெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். 
இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
தனி நெட்டெழுத்துகள் - 7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
சான்று :
காசு,  நாடு,  ஆறு,  பாகு

 
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

     ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் னப்படும்.
     ஆய்தம்  - 1  ஃ
சான்று :
     அஃது    ( அது என்பது பொருள்)
     கஃசு     ( பழங்காலத்து நாணயம் ஒன்று )

 
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

     தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்
    ஔ தவிர உயிர் 11
சான்று :
    வயிறு    (யி =   ய் + இ)
    படகு     (ட  =   ட் + அ)
    ஒன்பது  (ப   =  ப் + அ)

 
வன்தொடர்க் குற்றியலுகரம்

     வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
    வல்லினம் 6
சான்று : கொக்கு, பட்டு, முத்து, காற்று, கார்ப்பு, கச்சு
 

மென்தொடர்க் குற்றியலுகரம்

     மெல்லின (ஞ், ங், ந், ம், ண், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
    மெல்லினம் 6
சான்று : பந்து , பஞ்சு , உறங்கு , அன்பு , அம்பு ,பண்பு

 
இடைத்தொடர்க் குற்றியலுகரம்

     இடையின (ய், ர், ல், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். 
     (‘வ்’ இன்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.)
    இடையினம் 5
சான்று : எய்து , சால்பு , மூழ்கு

 

( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி

தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment