பக்கங்கள்

இலக்கணம் கற்போம்

இதழ் - 12                                           இதழ் -
நாள் : 17-07-2022                                    நாள் : ௧-௦௭-௨௦௨௨
  
 
குற்றியலிகரம்

     குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம். அதாவது குறுகிய ஓசையுடைய இகரம் என்று பொருள்படும். ‘உகரம்’ சில இடங்களில் குறுகிய ஓசை பெற்றுக் குற்றியலுகரம் ஆவது போலவே ‘இகரமும்’ சில இடங்களில் குறுகும். இவ்வாறு இகரம் குறுகி வருவதைக் குற்றியலிகரம் என்று கூறுவர்.
 
குற்றியலிகரம் இரண்டு வகையாக வரும்.
  1. புணர்மொழிக் குற்றியலிகரம்
  2. தனிமொழிக் குற்றியலிகரம்

1. புணர்மொழிக் குற்றியலுகரம்

     புணர்ச்சியின்போது நிலைமொழியின் ஈற்றில் குற்றியலுகரம் அமைந்து, வருமொழியின் முதலில் யகரம் வந்தால் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உகரம் இகரமாகத் திரியும். அப்போது அந்த இகரத்தின் ஓசை தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்கும். இதுவே குற்றியலிகரம் எனப்படும்.
 
சான்று
    நாடு(ட் +உ) + யாது     =  நாடியாது (ட் + இ )
    குரங்கு (க் + உ) + யாது  =  குரங்கியாது (க் + இ)
    பத்து (த் +உ) + யாது    =  பத்தியாது (த் +இ)
    சால்பு (ப் +உ) + யாது   =  சால்பியாது  (ப்+ இ)

2. தனிமொழிக் குற்றியலிகரம்
     மியா என்ற அசைச் சொல்லில் ‘ம்’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்த இகரம் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறுகி ஒலிக்கும். இதில் ‘ம்’ என்ற எழுத்திற்குப் பின் ‘யகரம்’ வருவதால் குறைந்து ஒலிக்கிறது. இது தனிமொழிக் குற்றியலிகரம் எனப்படும்.
 
சான்று
    கேள்+மியா = கேண்மியா
    செல்+ மியா = சென்மியா
 
    “யகரம் வரக்குறள் உத்திரி இகரமும் அசைச்
     சொல் மியாவின் இகரமும் குறிய”           நன்னூல் நூற்பா. 93
 
பொருள்: 
     இரண்டு சொற்கள் சேரும் இடத்தில் முதல் சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இரண்டாம் சொல்லின் முதலில் யகரம் வரும்போது இகரமாக மாறும். இந்த இகரமும் அசைச் சொல்லாகிய மியா என்பதில் உள்ள இகரமும் குறைந்து ஒலிக்கும்.


( தொடர்ந்து கற்போம் . . . )

தி.செ.மகேஸ்வரி
தமிழாசிரியர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய 
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர் – 641020
 

1 comment: